தினமும் ஒரு திருக்குறள்
தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உள்ளன. இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் வருகின்றன.
அதிகாரம் 23 – ஈகை
25.06.2025
குறள் 228: ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்
விளக்கம்: தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.
24.06.2025
குறள் 227: பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந் தீப்பிணி தீண்ட லரிது
விளக்கம்: தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.
23.06.2025
குறள் 226: அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி
விளக்கம்: வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.
22.06.2025
குறள் 225: ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவா ராற்றலிற் பின்
விளக்கம்: தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.
21.06.2025
குறள் 224: இன்னா திரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணு மளவு
விளக்கம்: பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.
20.06.2025
குறள் 223: இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள
விளக்கம்: யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.
19.06.2025
குறள் 222: நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று
விளக்கம்: பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது.
18.06.2025
குறள் 221: வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து
விளக்கம்: வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.
அதிகாரம் 22 – ஒப்புரவறிதல்
17.06.2025
குறள் 220: ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து
விளக்கம்: ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.
16.06.2025
குறள் 219: நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யா தமைகலா வாறு
விளக்கம்: ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.
15.06.2025
குறள் 218: இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர்
விளக்கம்: ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
14.06.2025
குறள் 217: மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்
விளக்கம்: ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.
13.06.2025
குறள் 216: பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்
விளக்கம்: ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.
12.06.2025
குறள் 215: ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு
விளக்கம்: ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.
11.06.2025
குறள் 214: ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்
விளக்கம்: ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.
10.06.2025
குறள் 213: புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற
விளக்கம்: தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம்.
9.06.2025
குறள் 212: தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு
விளக்கம்: ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.
8.06.2025
குறள் 211: கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ உலகு
விளக்கம்: இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.
அதிகாரம் 21 – தீவினையச்சம்
7.06.2025
குறள் 210: அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின்
விளக்கம்: ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.
6.06.2025
குறள் 209: தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந் துன்னற்க தீவினைப் பால்
விளக்கம்: ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.
5.06.2025
குறள் 208: தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயா தடியுறைந் தற்று
விளக்கம்: தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.
4.06.2025
குறள் 207: எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென் றடும்
விளக்கம்: எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.
3.06.2025
குறள் 206: தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான்
விளக்கம்: துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.
2.06.2025
குறள் 205: இலனென்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றுப் பெயர்த்து
விளக்கம்: யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.
1.06.2025
குறள் 204: மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு
விளக்கம்: மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.
31.05.2025
குறள் 203: அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய செறுவார்க்குஞ் செய்யா விடல்
விளக்கம்: தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.
30.05.2025
குறள் 202: தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்
விளக்கம்: தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.
29.05.2025
குறள் 201: தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை யென்னுஞ் செறுக்கு
விளக்கம்: தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.
அதிகாரம் 20 – பயனில சொல்லாமை
28.05.2025
குறள் 200: சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்
விளக்கம்: சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.
27.05.2025
குறள் 199: பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர்
விளக்கம்: மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.
26.05.2025
குறள் 198: அரும்பய னாயும் அறிவினார் சொல்லார் பெரும்பய னில்லாத சொல்
விளக்கம்: அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.
25.05.2025
குறள் 197: நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று
விளக்கம்: அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.
24.05.2025
குறள் 196: பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி யெனல்
விளக்கம்: பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.
23.05.2025
குறள் 195: சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின்
விளக்கம்: பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.
22.05.2025
குறள் 194: நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து
விளக்கம்: பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.
21.05.2025
குறள் 193: நயனில னென்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை
விளக்கம்: ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.
20.05.2025
குறள் 192: பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கட் செய்தலிற் றீது
விளக்கம்: பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.
19.05.2025
குறள் 191: பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்
விளக்கம்: கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்
அதிகாரம் 19 – புறங்கூறாமை
18.05.2025
குறள் 190: ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னு முயிர்க்கு
விளக்கம்: அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?
17.05.2025
குறள் 189: அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப் புன்சொ லுரைப்பான் பொறை
விளக்கம்: ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?
16.05.2025
குறள் 188: துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர் என்னைகொல் ஏதிலார் மாட்டு
விளக்கம்: நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?
15.05.2025
குறள் 187: பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்
விளக்கம்: மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.
14.05.2025
குறள் 186: பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந் திறன்தெரிந்து கூறப் படும்
விளக்கம்: மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.
13.05.2025
குறள் 185: அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும்
விளக்கம்: அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.
12.05.2025
குறள் 184: கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல்
விளக்கம்: எதிரே நின்று கண்ணோட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.
11.05.2025
குறள் 183: புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் அறங்கூறும் ஆக்கந் தரும்
விளக்கம்: புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.
10.05.2025
குறள் 182: அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை
விளக்கம்: அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.
9.05.2025
குறள் 181: அறங்கூறா னல்ல செயினும் ஒருவன் புறங்கூறா னென்றல் இனிது
விளக்கம்: ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.
அதிகாரம் 18 – வெஃகாமை
8.05.2025
குறள் 180: இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும் வேண்டாமை யென்னுஞ் செருக்கு
விளக்கம்: விளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.
6.05.2025
குறள் 178: அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்
விளக்கம்: ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.
5.05.2025
குறள் 177: வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன்
விளக்கம்: பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.
4.05.2025
குறள் 176: அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்
விளக்கம்: அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.
3.05.2025
குறள் 175: அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின்
விளக்கம்: யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?
2.05.2025
குறள் 174: இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்
விளக்கம்: ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்.
1.05.2025
குறள் 173: சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர்
விளக்கம்: அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.
30.04.2025
குறள் 172: படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர்
விளக்கம்: நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.
29.04.2025
குறள் 171: நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்
விளக்கம்: நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.
About Us
IMTC was founded to create a greater awareness of Tamil history and rich Tamil cultural by organising the cultural events and promoting Tamil language. IMTC has proved that it possesses the necessary knowledge, experience and vision to promote the Tamil culture in India, Sri Lanka and abroad.
Get in Touch
- Organisation registration number 12673950